காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழா நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 17ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 18ம் தேதி பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து வீதியுலா நடந்தது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து மாங்கனிகளை இறைத்தனர். அதைத்தொடர்ந்து வீதியுலா வரும் பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்சென்று அழைத்து இனிப்பு, பழங்கள் என பல்வேறு உணவுடன் இரவு 10:30 மணிக்கு இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் சத்யேந்திரசிங், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி உட்பட பலர் பங்கேற்றனர். இரவு புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோவிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.