பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
05:06
ஆயிரம் தானங்கள் உலகில் உண்டென்றாலும், அவை அன்னதானத்துக்கு ஈடாகுமா? போதும் என சொல்வது அன்னதானம் ஒன்றுதானே. கோயில்களில் அன்னதானம் செய்வது தலைமுறை கடந்தும் புண்ணியம் சேர்க்கும். பலர் இதைப் பல்வேறு கோரிக்கைகளாக வைத்தும், பிரார்த்தனையாகச் செய்தும் பலனடைகின்றனர்.
மாவிளக்கு தாத்பர்யம்: ஜோதிமயமான இறைவனே பரம்பொருள். தெய்வ ஆராதனையின் போது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, நந்தா விளக்கு என்று தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. ஆனால், அவை அத்தனையும் ஓர் மாவிளக்குக்கு ஈடாகுமா? பொதுவாக, அம்பாள், மாரியம்மன் மற்றும் பெருமாளுக்கு மாவிளக்கு பிரார்த்தனை செய்வர். மாவிளக்கு வழிபாடு ஒரு பிரத்யேக அர்ப்பணிப்பு, ஆத்மார்த்த வழிபாடு.
உள்ளமதை மாவாக்கி, உயிரதையே தட்டாக்கி,
உடலதையே திரியாக்கினேன் - என் கண்ணீரை
நெய்யாக்கி, ஆணவத்தை அனலாக்கி ஏற்றினேன் மாவிளக்கு
பச்சரிசி மாவு, வெல்லம், நெய், ஏலம் இவற்றின் கூட்டுச் சேர்க்கையே மாவிளக்கு. பச்சரிசி என்பது மனிதனின் உழைப்பையும், வெல்லம் என்பது வாழ்வின் இனிமையையும், நெய் என்பது பிறர் துன்பம் கண்டு உருகும் தன்மையையும், திரி என்பது தியாக உள்ளத்தையும் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த நான்கு நற்குணங்களும் அவசியம் என்பதை விளக்கவே மாவிளக்கு வழிபாடு வழக்கத்தில் வந்ததாகக் கூறுவர். வியாதிகள் நீங்க, குடும்பப் பிரச்னைகள் அகல, திருமண சுபகாரியங்கள் கைகூட மாவிளக்கு வழிபாடு செய்து பலன் பெற்றவர் ஏராளம்.
அங்கப்பிரதட்சிணம்: என் அங்கம் நோக உன்னை வணங்குகிறேன். என் பிரார்த்தனையை ஏற்று நல்லருள் புரிவாய் என நம்பிக்கையுடன் வேண்டி அங்கப் பிரதட்சணம் செய்து இறை அணுகூலம் பெற்றோர் ஏராளம். சரணாகதி அடைந்து ஆத்ம நிவேதனம் செய்தவரை ஆண்டவன் என்றும் கைவிடுவதேயில்லை.
தூய்மை வழிபாடு: கோயில் தொழுவது சாலவும் நன்று. கோயில் தூய்மை அதனினும் நன்று, மாதேஸ்வரன் மலைக்கோயிலில் தங்கள் கோரிக்கை நிறைவேறினால் கோயில் தூய்மை செய்வதாகப் பிரார்த்தனை செய்து, புதுத் துடைப்பம் வைத்து பூஜித்து மாட வீதிகளைப் பெருக்கி சுத்தம் செய்கின்றனர்.
பாடை கட்டி வழிபாடு: என் சொந்தத்தின் உயிரைக் காப்பாற்று, அவரை நோயிலிருந்து விடுவித்து உயிர் காப்பாய் தாயே! என வேண்டி நோய் நீங்கிய பின் அவர்களை பாடையில் படுக்க வைத்து கோயிலை வலம் வருதல் வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பிரசித்தமான பிரார்த்தனை.
இவை தவிர, செடல் போடுதல், அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல், பூக்குழி இறங்குதல், கரும்பு தொட்டில் தூக்குதல், காவடி எடுத்தல், நேர்த்திக்கடன் செலுத்தல், புஷ்ட கைங்கர்யம் செய்தல் என எண்ணற்ற பிரார்த்தனைகள் மூலம் ஏராளமான பலன்களை மக்கள் பெறுகிறார்கள்.
அறிவியல் விளக்கம்: நம்மிலும் உயர்ந்தவன் இறைவன். அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற உறுதியுடன், நம்பிக்கையுடன் நாம் வேண்டுவதால் நேர் வளச் சிந்தனை, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. உற்சாகத்துக்கான என்டோர்பின் நன்கு சுரக்கிறது; மனம் லேசாகிறது; நிம்மதி பிறக்கிறது.