பதிவு செய்த நாள்
23
ஜூன்
2016
10:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சேதமடைந்த கொடி மரத்திற்கு பதில், புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான பாலாலயம், ஜூலை, 9ல் நடக்கிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜன., 20ல் நடந்தது. இதன் பின், பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதி முன் உள்ள பழமையான கொடி மரம் முறிந்து சாய்ந்தது. இக்கொடி மரம் கீழே விழாமல் இருக்க, பக்கவாட்டில் தாங்கலாக மரத் துாண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஆடி திருக்கல்யாண விழா, ஜூலை இறுதியில் துவங்க உள்ளது. அதற்கு முன், சேதமடைந்த கொடி மரத்திற்கு பதில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்ய, அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக வனத்துறை அனுமதியுடன், 35 அடி உயரத்தில் தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொடி மரப் பணிக்கான பாலாலய பூஜை, ஜூலை, 9ல் நடக்கிறது. பணி முடிந்ததும், ஜூலை, 22ல் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்படும்.