பதிவு செய்த நாள்
23
ஜூன்
2016
10:06
சென்னை: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளின், சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில், 49 சிலைகள், நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளுக்கு சொந்தமான பங்களாவில், கோவில்களில் இருந்து திருடப்பட்ட, 285 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டன. சிலைகள் திருடுபோன கோவில்களில் உள்ள செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், பூசாரிகள், தலைவர்கள், சென்னை வரவழைக்கப்பட்டு, சிலைகள் பார்வையிடப்பட்டன. அதில், பிரம்மா சிலை தவிர மற்ற சிலைகளை, அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து, தீனதயாள் பங்களாவில் மீட்கப்பட்ட சிலைகள், நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் உள்ள, திருமேனி அரசு காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டன. சிலைகளை, சிலை தடுப்பு காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி, வடிவுடையம்மன் கோவில் உதவி கமிஷனர் லதாவிடம் ஒப்படைத்தார். இந்த சிலைகளில், மூன்று அடி உயரம் கொண்ட கருடன் சிலை, 7 செ.மீ., உயரம் கொண்ட அம்மன் சிலை, விநாயகர், புத்தர், பெருமாள், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட, பல்வேறு கடவுள்களின் ஐம்பொன் சிலைகளும் காணப்பட்டன. சிலைகள் அனைத்தும், கோவிலில் உள்ள உலோக சிலைகள் திருமேனி பாதுகாப்பு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அங்கு ஏற்கனவே, ஏராளமான ஐம்பொன் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.