பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
10:06
உடுமலையில் இருந்து மறையூர் செல்லும் வழியில் சின்னாறு செக்போஸ்டிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து ரம்மியமாக அமைந்துள்ளது கோடந்துார் மலைவாழ் குடியிருப்பு. இது ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்டது. இதனருகே சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பகுதியில், மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாகவும், வனதேவதையாகவும் அமைந்துள்ளது கோடந்துார் கட்டளை மாரியம்மன்.
சுயம்புவாக...: சுயம்புவாக பாறையில் தோன்றிய அம்மனை கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோடந்துார் மலைவாழ் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பக்தர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். சிலை இருந்தாலும் சுயம்புவாக காணப்படும் அம்மனுக்கே சிறப்பு அபிேஷகங்கள் நடைபெறுகிறது. இதனையே பக்தர்களும் விரும்புகின்றனர்.
முக்கிய நாட்கள்: வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோவிலில் வழிபாடு நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி அனைத்து அமாவாசைகளிலும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் மற்றும் பூஜைகள் செய்கின்றனர். ஆடி மற்றும் தை அமாவாசை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய நாட்களில் மட்டும், பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதியளிக்கின்றனர். ஒரு காரியத்தை நினைத்துக்கொண்டு தொடர்ந்து, மூன்று அமாவாசைகள் சுவாமி தரிசனம் செய்தால், நினைத்த காரியம் கைகூடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. உள்ளூர் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்: பழங்காலத்தில் மலைப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் தங்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள சூலாயுதத்தையே ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் இக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் சூலாயுதத்தையே வைத்து வழிபடுகின்றனர். இதனால் கோவில் முழுவதும் சூலாயும் குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகள், குழந்தை வரம் வேண்டி தொட்டில்களை கட்டிச் செல்கின்றனர். இதனால் தங்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என நம்பிக்கையும் உள்ளது.
வலிகள் போக்கும் தீர்த்தம்: அம்மனுக்கு மஞ்சள், பால் போன்ற பொருட்களால் அபிேஷகம் செய்யப்படுகிறது. இந்த பாலை பக்தர்கள் தீர்த்தமாக எடுத்துச்செல்கின்றனர். தலைவலி, கால்வலி, வயிற்று மற்றும் முதுகுவலிக்கு தடவிக்கொண்டால் வலிகள் குறைவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதே போன்று ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் உடல்நிலை சரியில்லாத போது தீர்த்தத்தை கொடுத்தால் குணமாவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல சிறப்புகளை கொண்டுள்ளதால் இந்த கோவிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் பக்தர்கள் வருவதற்கு இணையான போக்குவரத்து வசதி இல்லாததால், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உடுமலையில் இருந்து மறையூர் செல்லும் அரசு பஸ்களில் செல்லும் பக்தர்கள் சின்னாறு செக்போஸ்டில் இறங்கி, அங்கிருந்து மினிடோர் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர். மினி டோரில் அதிகளவிலான பயணிகளை அடைத்துக்கொண்டு செல்வதால் பாதுகாப்பில்லாத சூழ்நிலை காணப்படுகிறது. உடுமலையில் இருந்தும் சரியான பஸ் வசதி இல்லாததால், தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். -நமது நிருபர்-