பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
11:06
பழநி: கண்ணுக்கு இனிமை, கருத்துக்கு வளமை, தெய்வீக களையென பல்வேறு அம்சங்கள் நிறைந்த கழனி சூழ் நிலங்கள் பழநியில் நிறைய உள்ளன. பழநியில் இருந்து 3 கி.மீ., துாரத்திலுள்ள கோதைமங்கலம் சண்முகநதி கரையில் உள்ள பெரியாவுடையார் சிவன்கோயில் இவ்வகையில் அருஞ்சிறப்பு வாய்ந்தது. இக்கோயில் அமைந்துள்ள இடம் கன்னிகாவனம் என தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சேரர், பாண்டிய, கொங்குசோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளாக திருப்பணி செய்த சான்றுகள் உள்ளன. ஈஸ்வரன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கியவாறு பிரகதீஸ்வரர் என்ற பெரியாவுடையார் பெயரில் அருள்பாலிக்கிறார். கோயில் மதில்களில் பொறிக்கப்பட்ட 16 கல்வெட்டுகளை ஆராய்ந்ததில் சேரர் வம்சத்தை சேர்ந்த வீரகேரள, வீரநாரணர், அமரபுயங்கவர்மன், அதிராச ராசதேவன், வீரகேரளவர்மன், சோழர் வம்சத்தை சேர்ந்தபரகேசரிவர்மன், வீரநாரண அதிசய சோழதேவர், பாண்டியர் வம்சத்தை சேர்ந்த திருப்புவன சக்ரவர்த்தி, கோனேரின்மை கொண்டான் ஆகியோரால் திருப்பணிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொதுவாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு மூலவர் லிங்க வடிவத்தில் இருந்தாலும், சிவன் உருத்திராகவும், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகளும் உள்ளன. விநாயகர், மூம்மூர்த்திகளுடன், நவக்கிரகங்கள், கன்னிமார், கருப்பணசாமி போன்ற தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமியில் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். இலக்கியம் காட்டும் இன்பச் சோலை சூழ்ந்த பெரியாவுடையார் கோயிலை தரிசிக்க வேண்டாமா? டயல்பண்ணி (04545-242 236) விபரம் கேட்டுட்டு புறப்படுங்க.