தங்கள் குழந்தைகளுக்கு கெட்ட பழக்கங்கள் தொற்றக்கூடாது என்று கருதும் பெற்றவர்கள் தாங்களும் அந்த பழக்கத்தை விட வேண்டும். குழந்தை நன்றாக படிக்க வேண்டும். முதல் ராங்க் வாங்க வேண்டும் என எதிர்பார்க்கும் பெற்றோர் அவர்கள் டிவி பார்த்தால் கண்டிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அப்பழக்கத்தை விட முடியவில்லை. படிக்கும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமல், அவர்களை ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, இவர்கள் டிவி யே கதி என கிடக்கிறார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, தன் உறவுப்பையனை அழைத்து வந்தார். “ஐயா! இந்தப் பையன் அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நிலை கெட்டு விடும் என புத்திமதி சொல்லுங்கள், என வேண்டிக் கொண்டார்.நாயகம்(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அம்மணி! தாங்கள் இப்போது அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள், மூன்று நாட்கள் கழிந்து வாருங்கள், என்றார்கள்.
அப்பெண்ணும் மூன்று நாள் கழித்து வந்தார். அந்தப் பையனை அருகில் அழைத்த நாயகம் (ஸல்) அவர்கள், “தம்பி! இனி இனிப்பை அதிகமாக சாப்பிடாதே. உடல்நிலை கெட்டுவிடும், என்றார்கள்.அந்தப் பெண்ணுக்கோ கோபம்.“இதை நீங்கள் அன்றே அவனிடம் சொல்லியிருக்கலாமே! இன்னொரு தடவை ஏன் என்னை அலைய வைத்தீர்கள், என்றார்.நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாந்தமாக,“அம்மா! தாங்கள் கோபிப்பது சரிதான். ஆனால், அன்று நான் அவனுக்கு புத்திமதி சொல்லும் தகுதியில்லாமல் இருந்தேன். ஏனெனில், எனக்கே இனிப்பு பண்டம் சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்தது. இந்த மூன்று நாளாக கஷ்டப்பட்டு முயன்று இனிப்பு பண்டம் சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டேன். என்னிடமே அந்த வழக்கம் இருந்த போது, மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதியில்லாதவன் ஆகிவிடுகிறேன். எனவே தான் அன்று சொல்லவில்லை, என்றார்கள்.அப்பெண் ஆச்சரியப்பட்டார். இனியாவது குழந்தைகளை டிவி பார்க்கக்கூடாது எனச் சொல்லி, ரூமில் அடைத்து விட்டு, நீங்கள் தனியாக டிவி பார்க்கும் வழக்கத்தை கைவிடுவீர்களா?