சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 15-ம் தேதி மாலை திறக்கிறது. 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஆடி மாத பூஜைகளுக்காக வரும் ஜூலை 15ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. ஆடி ஒன்றாம் தேதியான 16 அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். தொடர்ந்து வழக்கமான கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, உதயா ஸ்தமனபூஜை, களபபூஜை, மாலையில் தீபாராதனை, அத்தாழபூஜை போன்றவை நடைபெறும். 16 முதல் 20 வரை எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும்.இந்த நாட்களில் சகஸ்ரகலச பூஜையும் நடைபெறும். 20-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையுடன் தற்போதைய தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரருவின் சுற்று முடிவடையும். ஆவணி ஒன்றாம் தேதி முதல் பூஜைகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமை வகிப்பார்.