பதிவு செய்த நாள்
29
ஜூன்
2016
10:06
சென்னை : சிலை கடத்தல் மன்னன், தீயதயாளனின் கூட்டாளி, லட்சுமி நரசிம்மனிடம் இருந்து கைப்பற்றபட்ட ஒன்பது சிலைகள், நேற்று மாலை, சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. சிலை கடத்தல் வழக்கில், தொழிலதிபர் தீனதயாளன், அவனது நண்பன் லட்சுமி நரசிம்மன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளில் சிலவற்றை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 21ம் தேதி, புத்தர் சிலை உள்ளிட்ட, 51 உலோக சிலைகளும், 23ம் தேதி, போர் வீரன் சிலை உட்பட, 5 சிலைகளும் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. நேற்று மாலை, லட்சுமி நரசிம்மனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளில், பாமா ருக்மணி, அர்த்தநாரீஸ்வரர், திருஞான சம்மந்தர் உள்ளிட்ட, ஒன்பது சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன.