பதிவு செய்த நாள்
29
ஜூன்
2016
10:06
திருப்பதி : தெலுங்கானா மாநிலம், ஹைரதாபாத்தில், உருவாக்கப்படும் விநாயகருக்கு, இனி, தெலுங்கானா லட்டை, நிவேதனம் செய்ய, செயற்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகில் உள்ள, ஹைரதாபாத்தில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 60 அடி உயர விநாயகர் சிலை ஏற்படுத்தபடும். இதை கண்காணிக்க, செயற்குழு ஒன்றை, இப்பகுதியினர் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த விநாயகர் கையில் வைக்க, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீபக்த ஆஞ்சநேயா இனிப்பக உரிமையாளர், மல்லிகார்ஜூனா, லட்டு தயார் செய்து, இலவசமாக அளித்து வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற, விநாயகர் சதுர்த்திக்கு, அவர், 18 லட்சம் ரூபாய் செலவில், 6 டன் எடையுள்ள, லட்டை தயார் செய்து, அனுப்பினார். இந்த லட்டை, விநாயகர் கையில் நிறுத்த, ஒரு கிரேன், தனியாக ஏற்பாடு செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி முடிந்த பின், விநாயகரை கரைக்க கொண்டு செல்லும் முன், லட்டு பிரசாதத்தை உடைத்து, பக்தர்களுக்கு வழங்குவர். அதை வாங்க பக்தர்கள், போட்டியிடுவர். இதனால், அந்நாட்களில், பலத்த உயிர்சேதம் ஏற்படுவதும் உண்டு. கடந்தாண்டு செய்த லட்டு பிரசாதத்தை, பக்தர்களுக்கு வினியோகிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பிரசாதத்தை வினியோகிக்காமல், செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே, லட்டை பங்கிட்டு கொண்டதாக தகவல் வெளியானது.மேலும், தெலுங்கானாவில் உருவாக்கப்படும் விநாயகருக்கு, ஆந்திராவிலிருந்து, லட்டு கொண்டு வருவது முறையல்ல, என எண்ணிய செயற்குழுவினர், தெலுங்கானாவிலேயே, லட்டு பிரசாதத்தை தயார் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால், இனி, ஹைரதாபாத் விநாயகருக்கு, ஆந்திரா லட்டு நிவேதனம் இல்லை, என முடிவிற்கு வந்த மல்லிகார்ஜூனா, ஆந்திராவின் புதிய தலைநகர், அமராவதியில் உருவாக்கப்படும் லட்டு பிரசாதத்தை, வழங்க முடிவு செய்துள்ளார்.