பதிவு செய்த நாள்
30
ஜூன்
2016
10:06
டேராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலின் அடித்தளம், மிகவும் பலவீனமாக இருப்பதாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிற்சி மையமான, ஐ.ஐ.டி., நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, கோவிலை சுற்றிலும், வாட்டர் புரூப் எனப்படும், தண்ணீர் புகாத தடுப்பு அமைக்கும் பணியை, தொல்லியல் துறை துவக்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2013ல் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கேதார்நாத் கோவிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புனித யாத்திரை வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களில் பலர், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கேதார்நாத் கோவிலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, சென்னை, ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதில், கோவிலின் அடித்தளம் மிகவும் பலமிழந்துள்ளது. அதனால், கோவிலின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மீண்டும், அடித்தளத்தில் தண்ணீர் புகுந்தால் அல்லது கசிந்தால், கோவில் இடிந்து விழும் அபாயம் உள்ளது என, கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, டேராடூனில் உள்ள தொல்லியல் துறை அதிகாரி லில்லி தஸ்மானா கூறியதாவது: ஐ.ஐ.டி., நிபுணர்களின் பரிந்துரைப்படி, கோவிலின் அடித்தளத்தை பாதுகாக்கும் வகையில், நீர் புகாதபடி, வாட்டர் புரூப் தடுப்பு அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது. கோவிலின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. அடித்தளம் பாதிக்கப்பட்டாலும், கருவறை பாதிக்கப்படாமல் மிகவும் வலுவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.