கஷ்டப்படுவோரில் பலர் அதில் இருந்து மீளும் வழியைப் பற்றி சிந்திக்காமலும், தங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க கடவுளிடம் வேண்டாமலும் தற்கொலைக்கே முயல்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கஷ்டம் தாண்டவமாடியது. அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கடைப்பக்கம் போனாலே, உரிமையாளர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். ஆனாலும், பசி தாளாத அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், ஒரே ஒரு ரொட்டி மட்டும் கடனுக்கு கேட்டான். அந்த வியாபாரியோ பையனுக்கு திருட்டுப்பட்டம் கட்டி உதைத்து அனுப்பி விட்டார். இதைத் தாங்க முடியாத அவனது தாய், மகனுடன் தற்கொலைக்கு முயன்றாள்.
அதைப் பார்த்த இரக்கமுள்ள ஒரு ஏழைப் பெண், இது என்ன கோழைத்தனம்! கஷ்டம் வந்தால் போராட வேண்டும். நான் கணவனை இழந்தவள். இரண்டு குழந்தைகளை வளர்க்க வீடுகளில் பாத்திரம் தேய்க்கிறேன். கிடைப்பதைக் கொண்டு சாப்பிடுகிறேன். என்றேனும் ஆறுதல் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இயேசுவிடம் தொடர்ந்து ஜெபிக்கிறேன். பைபிளில் சொல்லப்பட்டுள்ள வசனம் ஒன்றை வாசிக்கிறேன் கேள்! நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் கஷ்டத்தை கடவுளிடம் விட்டுவிடுங்கள்! உன் கணவனும், நீயுமாய் சேர்ந்து உழையுங்கள். குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். என்ன வேலை என சிந்திக்காதீர்கள். கிடைத்த வேலையைச் செய்து, குறைந்த வருமானத்தில் காலம் கழிக்க பழகுங்கள். தேவன் நன்மையை விரைவில் தருவார், என்றாள். ஆம்... இன்பம், துன்பம் இரண்டுமே கடவுளால் தரப்படுபவை தான். அவற்றை ஏற்று, துன்பங்கள் குறைய அவரையே ஜெபிக்க வேண்டும். கடவுள் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.