இஸ்லாமியத்தின் ஓர் உயரிய மாதம் ரமலான். ரமல் என்றால் கரித்தல். ஆம்! இம்மாதம் பாவங்களைக் கரித்து விடுகிறது. இந்தக் காலங்களிலே செய்கிற எந்த நல்ல காரியத்திற்கும் 70 மடங்கு நன்மை இருக்கிறதென்றால் இம்மாதத்தின் மகத்துவத்திற்கு அளவில்லை தானே! அல்லாஹ்வின் அருட்கொடையான குர்ஆன், இம்மாதத்தில் தான் இறங்கியது. ஆயிரம் மாதங்களை விட ஒரு மேலான இரவு இம்மாதத்தின் கடைசி பத்தில் ஒற்றை இரவுகளில் ஒளிந்து கிடக்கிறது. சம்பாதித்து செலவெல்லாம் போகச் சேர்த்து வைத்திருக்கும் பணத்திலே ரூ.40க்கு ரூ1 என ஜக்காத்(ஏழை வரி) கடமையை நிறைவேற்ற ஏற்றமான மாதம் இது. மாடிவீட்டு மனிதர்கள், மண்குடிசையின் பசியை அறிந்து கொள்ள, இஸ்லாமியருக்கு இந்த மாதம் ஒதுக்கப்பட்டது போல, உலகச்சரித்திரத்தில் வேறு யாருக்கும் இப்படி ஒதுக்கப்படவே இல்லை. சொர்க்கம் அலங்கரிக்கப்பட்டு நரகத்திற்கும், ஷைத்தானுக்கும் விலங்கு பூட்டப்படுகிற உன்னதம் வேறு எந்த மாதத்திற்கும் இல்லவே இல்லை. இம்மாதத்தை பத்துப் பத்தாய் மூன்று பகுதிகளாகப் பிரித்தால் முதல் பகுதியிலே ரஹ்மத் என்னும் அருள் கிடைக்கிறது.
இரண்டாம் பத்திலே மஃபிரத் என்னும் பிழைபொறுத்தல் கிடைக்கிறது. மூன்றாம் பத்திலே நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மொத்தத்தில் முழுமையாய் மாதத்தின் முப்பது நாட்களிலும் நோன்பு நோற்கிற நிலையால் மனிதப் புனிதராய் மாறி விடுகிறோம் என்பதை மறுக்க முடியாது. நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பவருக்கு ஏகப்பட்ட நன்மைகளை அல்லாஹ் அள்ளித் தருகிறான். ஏழை, இல்லாதோருக்கு செல்வங்களை வாரி வழங்குகிற உன்னத உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதை இஸ்லாம் ஆணையிட்டுக் கூறுவதால், ஏழைகளின் மனதிற்குள் சந்தோஷம் தெளிக்கப்படுகிறது. நோன்பு காரணமாக உள்ளம் வலிமை பெறுவது போலவே, உடலின் அத்தனை நோய்களும் நீங்குகிற உன்னதமும் நடக்கிறது. செரிமானப் பகுதிகள் அனைத்தும் ஓய்வுக்குள் உட்கார்ந்து கொள்வதால் நம் உடல் புதிய தெம்பில் பூரிக்கத் தொடங்குகிறது. புத்தம் புதிதாய் ரத்தம் சுரக்கிறது. மூளை புத்துணர்ச்சியடைந்து இன்னும் விரிவாய் விஷயங்களைத் தேடி அடியெடுத்து வைக்கிறது. பசியை உணர வைப்பதன் மூலம் இல்லாதவர்கள் மீதான பாசத்தை பலநுõறு மடங்கு இரட்டிப்பாக்கி இந்த சமூகத்தின் மீதான தாக்கத்தை நமக்குள் நிரப்புகிறது. காலைத் தொழுகைக்கு முன் உணவை விட்டு, மஹ்ரிப் தொழுகைக்கு முன் மாலை முடிவுறும் நேரத்தில் உணவைத் தொட்டு.... இந்த ஒரு மாதத்தின் செயல்பாடு நம் வாழ்வின் மிச்ச பொழுதுகளை வழிநடத்த வலிமை தருகிறது. பிறை கண்டு நோன்பு வைத்து, மறுபிறை கண்டு நோன்பு விடும் இந்த மாதம் உன்னதமான மாதம் என்றால் மிகையில்லை.