பதிவு செய்த நாள்
01
ஜூலை
2016
11:07
மதுரை : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாயக் கண்ணன் துாங்குகிறான் தாலேலோ... பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாேலலோ... இப்படி குறும்புகள் அரும்பும் மாயக்கண்ணனின் லீலைகளை பார்த்து ரசிப்பதை விட, நம் கண்களுக்கு வேறு வேலைகளே இல்லை. அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யார் அவனை துாங்கவிட்டார் ஆராரோ... ஆம், துாங்கும் கண்ணனை கண்ணா... கண்ணா... என, பக்தர்கள் யார்யாரோ அழைத்து ஆராரோ பாடினால் எப்படி துாக்கம் வரும்.
இதோ, துயில் நீக்கிய கண்ணன் மனமிறங்கி நாட்டிய நடிகை ஷோபனா ரூபத்தில் மயிலிறகாய் நம் மனதை வருட மதுரைக்கு வருகிறான்... கண்ணா வருவாயா... ராதா அழைக்கிறாள் என, கண்ணனை தேடியவர்கள் ஜூலை 3 மாலை 6:00 மணிக்கு மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலுக்கு சென்றால் ஆனந்த கண்ணனை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கலாம். சென்னையில் கலர்பணா என்ற நடனப் பள்ளியை நடத்தி வரும் ஷோபனா கிருஷ்ணா என்ற இந்நாட்டிய நாடகத்தை உருவாக்கி 94 மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். மதுரையில் இந்நிகழ்ச்சி முதன்முதலாக அரங்கேறுகிறது. நாட்டிய வடிவில், அதர்மத்தை அழிக்க ஆலிலை கண்ணன் அவதரிக்கும் அற்புத காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தாகும்; காயப்பட்ட மனங்களுக்கு மருந்தாகும். இது அரங்கமா... சொர்க்கமா... என, நினைக்கும் வகையிலான ஒளி விளையாடும் மேடை அமைப்பு தொழில்நுட்ப கலைகளின் வியப்பு. விழிகளின் விளிம்பில் வழிந்தோடும் ஆச்சரியத்தோடு, ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியின் ஒலியில் புல்லாங்குழலின் வேணு கானம் செவிகளில் இனிதாய் நுழைந்தோடும்.
நாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு சூர்யா, பிரபு, ஷப்னா ஆஸ்மி, ஆண்ட்ரியா, ராதிகா போன்ற நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். அதர்மத்தை அழிக்க நான்மாடக்கூடலில் கண்ணன் மையம் கொள்ளப்போகிறான். அன்பை அரவணைக்கும் பக்தர்களின் மனதை கொள்ளை கொள்ள வருகிறான்... தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான், தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான், கேட்டவருக்கு கேட்டபடி கண்ணன் வந்தான்... என, ஆனந்தமாய் ஆடி, பாடி கண்ணனை வரவேற்க வாருங்கள். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் இணைந்து வழங்குகிறது.
தொடர்புக்கு: 98841 52200.