பதிவு செய்த நாள்
01
ஜூலை
2016
11:07
சாத்துார் :சாத்துார் அருகே ஆயிரமாண்டு பழமை வாய்ந்த நடுச்சத்திரம் காசிவிஸ்வநாதர்-அன்னபூரணியம்மாள் கோயிலில், 50 ஆண்டாகியும் விழாக்கள் நடத்தாததால் பக்தர்கள் ஏக்கத்தில் உள்ளனர். இக்கோயிலை புனரமைக்க, இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏழாயிரம்பண்ணை அடுத்துள்ளது நடுச்சத்திரம் .இங்குள்ள காசிவிஸ்வநாதர் அன்னபூரணியம்மாள் கோயில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. செவல்பட்டி ஜமீன்தாரின் பராமரிப்பில் இருந்த இக்கோயில் 1952 முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. இக்கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன் உற்சவ சிலைகள், நகைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வைகாசி மாத திருவிழாவும் நின்று போனது.
ரூ. 40 லட்சம் நிதி: இந்நிலையில் இக்கோயிலின் வசந்தமண்டபம், அன்னதான மண்டபம், குதிரைமண்டபம், மற்றும் மாடப்பள்ளி உள்ளிட்ட கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி, ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சிவ பக்தர்கள், இக்கோயிலின் நிலையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, புனரமைப்புக்காக ரூபாய் 40 லட்சம் நிதி பெற்றனர். அதன்படி கோயில் மண்டபங்கள் மற்றும் சுற்றுப்பிரகார கிரிவல தளங்கள் சீரமைக்கப்பட்டன. சிவ பக்தர்கள்மேலும் அன்னதான மண்டபம், தேர்நிலை, கோயில் அருகில் உள்ள கல் மண்டபங்கள் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இக்கோயில் தேரானது உருக்குலைந்துள்ளது. சேதமடைந்த மண்டபங்களை சீரமைப்பதுடன் புதிய தேர்செய்து விழா நடத்த சிவ பக்தர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரூ. பல கோடி நகை: மேலச்சத்திரம் பொன்ராஜ், “கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேரோட்டம் மற்றும் கோயில் விழாக்கள் விமரிசையாக நடந்தது. ஆலங்குளம், சிவகாசி, கழுகுமலை, சங்கரன்கோவில் பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு வந்தனர். காலப்போக்கில் விழா கொண்டாட்டம் இல்லாமல் போய்விட்டது. இக்கோயிலை பராமரிப்பதற்காக நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மன்னர்கள் தானமாக வழங்கினர். பல ஆயிரம் கோடி மதிப்புடை நகைகளும் அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை மீட்பதுடன், கோயிலை முற்றிலுமாக புனரமைக்க வேண்டும்,” என்றார்.