மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாக்களுக்கு தேவையான திருக்குடைகள் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. தீமிதி, கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு கோவில் திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிப்பது வழக்கம். இதுபோன்று அலங்கரித்து வரும் வாகனங்களில் சுவாமிக்கு மேலே அழகிய திருக்குடைகள் வைக்கப்பட்டிரு க்கும். இந்த திருக்குடைகளை மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் கிராமத்தில், ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் குணசேகர் என்பவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். இது குறித்து அவர், கூறியதாவது; திருக்குடை செய்வது எங்கள் குல தொழில்; பரபம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு திருக்குடைகளை செய்து தருகிறோம். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆவணி மாதம் வரை திருக்குடைகள் செய்யப்படும். 6,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை குடைகள் செய்து தரப்படுகிறது. குடைகளுக்கான மூலப்பொருட்கள் விழுப் புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறேன். சிறியரக 6,000 ரூபாய் மதிப்புள்ள குடையை செய்ய 5 நாட்கள் வரையும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பெரிய அளவிலான குடைகளை 15 நாட்கள் வரையும் செய்யப்படும். மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இங்கு செய்யப்படும் குடைகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.