பதிவு செய்த நாள்
02
ஜூலை
2016
11:07
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு விபூதி, பால், இளநீர், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 27 ம் தேதி முதல், 30ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடக்கவுள்ளது. ஆடிக்கிருத்திகை முன் வரும் கிருத்திகை என்பதால் நேற்று வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மேலும், பொதுவழியில் மூலவரை தரிசிக்க குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.