பதிவு செய்த நாள்
02
ஜூலை
2016
11:07
ஜம்மு : அமர்நாத் குகை கோவிலை தரிசிக்க, முதற்கட்டமாக, 1,282 பேர் அடங்கிய யாத்ரீகர்கள் குழு, நேற்று, பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில், பனிலிங்க வடிவில், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அமர்நாத் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை, நேற்று துவங்கியது. மாநில துணை முதல்வர் நிர்மல் சிங், துணை அமைச்சர் பிரியா சேத்தி, ஜூகல் கிஷோர் எம்.பி., ஆகியோர் முன்னிலையில், நேற்று காலை 5:00 மணிக்கு, ஜம்முவில் உள்ள பகவதி நகர்யாத்ரா நிவாஸில் இருந்து, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, முதல் குழு புறப்பட்டது. இந்த குழுவைச் சேர்ந்த, 1,282 பேர், 13 பஸ்கள், 24 மினி பஸ்களில் புறப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக, துணை ராணுவத்தினர் சென்றனர். அமர்நாத் செல்லும் வழியில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.