பதிவு செய்த நாள்
02
ஜூலை
2016
11:07
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தினரின் அதிகார போட்டியால் மங்கல தீர்த்தம் பூங்கா பராமரிப்பின்றி முடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள மரக் கன்றுகள், செடிகள் தண்ணீரின்றி கருகிவருகிறது. ராமேஸ்வரம் - தங்கச்சிமடம் ஊராட்சிகுட்பட்ட மங்கல தீர்த்த குளத்தில் நீராடினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடுவது வழக்கம். பக்தர்கள் பொழுதுபோக்க வசதியாக தீர்த்த குளத்தின் அருகில் கோயிலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் இடத்தில் பூங்கா அமைக்க முந்தைய கலெக்டர் நந்தகுமார் முடிவு செய்தார். இதற்காக வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பூங்கா பகுதிக்குள் பழமர கன்றுகள், பூ செடிகள், மூலிகை செடிகள், கிரகண செடிகள் நடப்பட்டது. இதனை பசுமை பூங்காவாக மாற்றி தங்கச்சி மடம் ஊராட்சி பராமரித்து வந்தது. இந்நிலையில் கோயில் இடத்தில் அமைத்த பூங்காவை பிறர் பராமரிக்கவோ, மக்களிடம் கட்டணம் வசூலிக்கவோ அனுமதிக்க முடியாது.
பூங்காவை நாங்களே பராமரிப்போம் என, கோயில் நிர்வாகம் போர்கொடி துாக்கியது. இதனால் பூங்கா பராமரிப்பதை பஞ்சாயத்து நிர்வாகம் கைவிட்டது. இதனால் பூங்கா பொலிவிழந்து முடங்கி உள்ளதோடு, அங்குள்ள மரம், செடிகள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதுகுறித்து தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் ஞானசீலன் கூறியதாவது:மாவட்ட கலெக்டர் நிதியில் அமைத்த பூங்காவில் மரக் கன்றுகள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை பராமரிக்க ஊராட்சி சார்பில் நுாறு நாள் வேலை திட்ட ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். கோயில் நிர்வாகம் அனுமதித்தால் மங்கல தீர்த்தம் பூங்கா ராமேஸ்வரம் தீவின் பசுமை பூங்கா வாக உருவாக்குவோம்,” என்றார். இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது: பூங்கா அமைந்துள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது. அங்கு மரக் கன்றுகள், மூலிகை செடிகள் பராமரிக்க ஊராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் கோருகிறது. இதுகுறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி விரைவில் முடிவு எட்டப்படும்,” என்றார்.