பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
10:07
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு பாலாபிஷேகம், புற்றுக்கு பால் வார்த்தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்து படையல் ஆகிய வழிபாடுகள் விமரிசையாக அரங்கேறின. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதனால், பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
அபிஷேக அலங்காரம்: நேற்று, ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில், மயிலாப்பூர் முண்டகக் கன்னி அம்மன் கோவில், சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், கோடம்பாக்கம் ஆதி துலுக்கானத்தம்மன், நங்கநல்லுார் ராஜேஸ்வரி அம்மன் கோவில், அடையாறு முத்துமாரியம்மன், திருவல்லிக்கேணி மாங்காடு காமாட்சி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன், ரத்தினமங்கலம் அரைக்காசு அம்மன் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக அலங்கார நடந்தது.
மாவிளக்கு வழிபாடு: அதிகாலையே பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வேளச்சேரி, ஆதம்பாக்கம் புற்றுக் கோவில், உள்ளகரம் திரவுபதியம்மன் கோவில், மடிப்பாக்கம் குணாளம்மன் கோவில் உள்ளிட்ட புற்று உள்ள கோவில்களில் பக்தர்கள் பால் ஊற்றி, பழம் வைத்து வழிபாடு செய்தனர். பெரும்பாலான அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து படையலிட்டனர்; மாவிளக்கும் ஏற்றி வழிபட்டனர். பிரதான கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். - நமது நிருபர் -