பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
11:07
பழநி: பழநி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் எளிதாக சுற்றிவருவதற்கு வசதியாக சூட்டை தணிக்கும் கூல் புரூப் பெயின்ட் தரைத்தளத்தில் அடிக்கப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு மேலாக வருகின்றனர். அதுவே கார்த்திகை, பவுர்ணமி, சஷ்டி, சுபமுகூர்த்ததினங்கள், விடுமுறைநாட்களில் இன்னும் கூடுதலாக குவிகின்றனர். அதில் பால்குடம், காவடிகள், அங்கப்பிரதட்சணம், உடலில் அலகு குத்திவரும் பக்தர்கள் வெளிப்பிரகாரத்தை வலம்வந்து மூலவர் ஞானதண்டாயுத பாணிசுவாமியை தரிசனம் செய்கின்றனர். இதில் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அதிக வெயிலின் தாக்கத்தினால் வெளிப்பிரகாரத்தை சுற்றிவருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு கோயில்நிர்வாகம் வெப்பத்தை குறைத்து குளிச்சியை தரும் வேதிப்பொருட்கள் அடங்கிய கூல்புரூப் பெயின்ட் ஐ வெளிப்பிரகாரத்தில் 10 அடி அகலத்திற்கு அடித்துள்ளனர். இது எவ்வளவு வெயில் அடித்தாலும் வெப்பத்தை உள்ளே ஈர்த்து குளிர்ச்சியை வெளிப்படுத்தும். இதன்மூலம் அதிக வெயிலுள்ள நேரத்திலும் பக்தர்கள் எளிதாக வெளிப்பிரகாரத்தை வலம் வரலாம்.
கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்ரல், மே கோடை காலத்தில் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வெளிப்பிரகாரத்தை வலம்வரவும் தற்காலிக நிழற்பந்தல், தரைவிரிப்பான்கள் அமைக்கப்படுகிறது. தற்போது “கூல் புரூப் பெயின்ட்” அடித்துள்ளோம். பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து எவ்வளவு நாள் பயன்தருகிறது என பார்த்து அதன்பின் மற்ற உபகோயில்களிலும் பயன்படுத்தப்படும்,”என்றார்.