பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
12:07
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னையின் திருத்தேர் பவனி ஆக., 5 ம் தேதி நடக்கவுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆக., 5 ம் தேதி வரை நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். நேற்று ஜூலை 25 ல் மாலை கொடி பவனி நடந்தது. இதில் பக்தர்கள் மாதாவுக்கு காணிக்கை பொருள்கள் வழங்கினர். இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இன்று(ஜூலை26) காலை 5 மணிக்கு ஜெபமாலையுடன் வழிபாடுகள் துவங்கியது. காலை 7.30 மணிக்குதூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின் காலை 8.30 க்கு சர்ச் முன்பாக உள்ள கொடி மரத்தில், பக்தர்கள் முன்னிலையில் பிஷப் இவோன் அம்பு ரோஸ் கொடியினை ஏற்றி வைத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், அன்பை வெளிப்படுத்தும் விதமாக அனைவருக்கும் பால், பழங்கள் வழங்கினர். ஆக., 5 ம் தேதி வரை தினமும் காலை 4.30 மணிக்கு ஜெபமாலை, 4.45 க்கு முதல் திருப்பலி, 5 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 க்கு ஜெபமாலை, மாலை 3 க்கு ஜெபமாலை,மறையுரை, இரவு 7.15 க்கு ஜெபமாலை,நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆக., 4ல் இரவு 7 மணிக்கு பிஷப் இவோன் அம்பு ரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு ஆராதனை நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு சர்ச் வளாகத்தில் அன்னை திரு உருவ பவனி நடக்கிறது. ஆக., 5ல் காலை 5.30 மணிக்கு மதுரை முன்னாள் பிஷப்பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் திருப்பலி நடக்கிறது.காலை 7.30 க்கு கூட்டு திருப்பலி, மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு அன்னையின் திருத்தேர் பவனி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும். இதனை தொடர்ந்து விழா நிறைவு பெறும்.விழா ஏற்பாடுகளை பாதிரியார் லெரின் டிரோஸ், துணை பாதிரியார் வினிஸ்டன், திருச்சபையினர் செய்து வருகின்றனர்.