பதிவு செய்த நாள்
27
ஜூலை
2016
11:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று, ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கம், தங்கவேல், தங்ககீரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப் படிகள் வழியாக சரவணபொய்கை திருக்குளத்திற்கு வந்து, மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து, மலைக்கோவிலுக்கு உற்சவர் சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காவடி களுடன் வந்து மூலவரை தரிசித்தனர்.
இன்று ஆடிப்பரணியும், நாளை, ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. தெப்பலில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெறும். நாளை மறுநாள் (29ம் தேதி) இரண்டாம் நாள் தெப்ப திருவிழாவில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், இரவு, 7:00 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறும். வரும், 30ம் தேதி, மூன்றாம் நாள் தெப்ப திருவிழாவில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின், நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், இரவு, 7:00 மணிக்கு வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறும். மூன்று நாட்களும் தெப்பலில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சரவணபொய்கையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஒன்றிணைந்து செய்து வருகின்றனர். இன்று முதல், நாளை இரவு வரை, மலைக்கோவிலுக்கு இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கார், வேன் போன்ற நான்குசக்கர வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பாஸ் வழங்கப்பட்டுள்ளது.