பதிவு செய்த நாள்
27
ஜூலை
2016
02:07
அம்மாபேட்டை; சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று ஆடிப்பண்டிகை பூச்சாட்டுதல் விழாவுடன் துவங்கியது. அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொண்டு வந்தனர். அம்மனுக்கு பூச்சாட்டுதல் நடந்த பிறகு, இங்கிருந்து அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பட்டைகோவில் சின்னமாரியம்மன், பொன்னமாபேட்டை மாரியம்மன், காமராஜர் நகர் மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், பாவடி மாரியம்மன் என, எட்டு பட்டிகளில் உள்ள, 72 மாரியம்மன் கோவில்களிலும் பூக்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கும் பூச்சாட்டுதல் விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 28 கண்காணிப்பு கேமராசேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், ஆடித்திருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சம்பத் பேசியதாவது: சேலம் கோட்டை பெரியமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, ஆகஸ்ட் 16 ம்தேதி வரை நடைபெற உள்ளது. குடிநீர் தேவைக்கு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சுற்றுப்பகுதியிலும், பொங்கல் வைக்கும் இடத்திலும், சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்துாள் போட வேண்டும். தீயணைப்பு வாகனங்களை நிறுத்தியிருக்க வேண்டும். கோவிலில், எட்டு நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள், 20 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.