பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
12:07
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்து மாரியம்மன் ஆடித் தேரோட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை பசுபூஜைக்குப் பின் மூலவர், உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கோமுகி நதிக்கரைக்கு சென்று சக்தி அழைத்தல் பூஜை நடத்தினர். கோமுகி நதிக்கரையிலிருந்து 108 பெண்கள் தீச்சட்டி ஏந்தி, ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர். தேருக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவஜனம், கலச பூஜை நடத்தப்பட்டது. களி மண்ணால் செய்யப்பட்ட கோட்டை போன்ற வடிவினை காளி வேடமிட்ட பக்தர், கோட்டை இடிக்கும் வரலாற்று நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர், தேரில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன், வீதியுலா நடந்தது. நகர் மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகரன், நகர அ.தி.மு.க., செயலாளர் பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். முன்னதாக அறங்காவலர் நற்குணம், தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.