பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரத்தில் அபாயகரமான இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது, என, ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அருண் மேனன் கூறினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி?ஷகத்திற்காக, 25 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரத்துடன் உள்ள கோவிலின், கிழக்கு திசையில் உள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ராஜகோபுர திருப்பணியை ஸ்தபதி குமரகுருபரன் தலைமையில், இன்ஜினியர் ஸ்ரீதர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராஜகோபுரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட போது, மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள, நான்காவது தூணில் மேற்கூரையில், மூன்றாவது பீமில், நான்கு அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். கட்டமைப்பு பொறியியல் ஆய்வக சென்னை ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அருண் மேனன், நேற்று விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார். கலெக்டர் ஞானசேகரன், கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் உதவி பேராசிரியர் அருண்மேனன் நிருபர்களிடம் கூறியதாவது: கோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல், சிக்கலான அபாயகரமான இடத்தில் உள்ளது. இதை கண்டிப்பாக சரி செய்தே ஆக வேண்டும். இந்த விரிசல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது, புதியதாக விரிசல் ஏற்பட்டது போன்று தெரியவில்லை. இந்த கோபுரம் மிகப்பழமை வாய்ந்தது என்பதால், எதனால் விரிசல் ஏற்பட்டது என்பதை உறுதியாக கூற முடியாது. விரிசல் பகுதியில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வைத்து ஒட்டி சரி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.