பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
11:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிக் கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழாவில், ஒன்றரை லட்சம் பக்தர்கள், முருகப் பெருமானை தரிசித்தனர். இதில், ஒரு லட்சம் பக்தர்கள் காவடிகளுடன் குவிந்ததால், பொதுவழியில், 10 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டியதாயிற்று.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா கடந்த, 26ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப்பரணியும், நேற்று, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல்நாள் தெப்பத் திருவிழா நடந்தது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 12:30 மணிக்கு, திருப்பதி, திருமலையில் இருந்து, கோவில் செயல் அலுவலர் சாம்பசிவராவ், துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜூ மற்றும் கோவில் தலைமை குருக்கள் ஆகியோர் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, 11வது முறையாக, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர். அப்போது, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் தனபாலன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, மூலவரை தரிசித்த பின், பட்டு வஸ்திரத்தை சண்முக பெருமானுக்கு அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பதி கோவில் அதிகாரிகளுக்கு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஒன்றரை லட்சம் பக்தர்கள்: ஆடிக்கிருத்திகை, விழாவில் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள் எடுத்தும், பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடிவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். ஆடிக்கிருத்திகையை யொட்டி, திருத்தணி நகர் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனத்தின் சார்பில், அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.மொத்தத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை, ஒன்றரை லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, 10 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்னர். விரைவு தரிசனம் செய்வதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், 150, 100 மற்றும் 50 ரூபாய் டிக்கெட்டுகள் மலைக்கோவிலில் விற்பனை செய்யப்பட்டன.
பக்தர்கள் தள்ளுமுள்ளு: முருகன் மலைக்கோவிலுக்கு, நேற்று பகலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்றிருந்தனர். அப்போது, வி.ஐ.பி.,க்கள் அவ்வழியாக செல்லும் போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், வி.ஐ.பி., நுழைவு வாயிலில், போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால், திருப்பதி பட்டுவஸ்திரம் வந்த போது, கடும் சிரமத்திற்கு பின்பு தான், திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் உள்ளே சென்றனர். மேலும், பக்தர்கள் அங்கு நுழைய முயன்ற போது போலீசார் அவர்களை வலுக்கட்டயமாக இழுத்து தள்ளப்பட்டதில், சிலர் கீழே விழுந்து, எழுந்து சென்றனர்.