குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2016 05:07
சின்னமனூர்: குச்சனூர் கோயிலில் நடந்த சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேனிமாவட்டம் குச்சனூர் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான உற்சவர் சனீஸ்வரருக்கும் நீலாதேவியாக பாவிக்கப்படும் கும்பத்திற்கும் திருக்கல்யாணம் நடந்தது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து , திருமாங்கல்யம் பூட்டினார்.
மூலவருக்கு மஞ்சள் சாத்துபடி: சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுக்கும் நிகழ்ச்சி, நாளை (ஜூலை 30)இரவுநடக்கிறது. இதற்காக மஞ்சள், எலுமிச்சை , படிகாரம் மற்றும் மூலிகைகள் கொண்ட கலவையால் மூலவருக்கு சாத்துபடி நடக்கும். இதற்கான மூலிகை கலவையை கடந்த இரண்டு வாரங்களாக 15 பெண்கள் தயாரித்து வருகின்றனர். சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின் மூலவர் மீது மூலிகை கலவையை தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து சாத்துவார். அவர் கூறுகையில், ‘சுயம்பு மூலவரின் வளர்ச்சியை சமமாக பராமரிக்க மஞ்சள் சாத்துபடி செய்யப்படுகிறது. மூலிகை கலவையில் சிவந்த நிறத்திற்காக மாதம் ஒரு முறை நல்லெண்ணெய் பூசப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மூலவருக்கு சாத்துபடி நடக்கும்,” என்றார்.