பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
11:07
உடுமலை: உடுமலை அருகே, வருவாய் இருந்தும், பராமரிப்பில், இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டுவதால், பழமையான கோவில், பாழடைந்து காணாமல் போய் வருவதாக, கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடுமலை அருகே, கோட்டமங்கலத்தில், 200 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் சார்பில், பல்வேறு சிறப்பு வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளது.
தற்போதைய நிலை: பல்வேறு காரணங்களால் தற்போது கோவில் இருப்பது தெரியாமல் அழிந்து வரும் நிலையில் காணப்படுகிறது. இந்து அறநிலையத்துறை, கட்டுப்பாட்டிலுள்ள கோவில், பராமரிப்பில்லாமல், அதன் அடையாளத்தை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறது.சிதிலமடைந்த சுவர்களுக்கு நடுவில், வேப்பமரம் மற்றும் சிறிய சிலையுடன் மட்டுமே காட்சியளிக்கிறது. கோவிலுக்கு சொந்தமாக, பி.ஏ.பி., பாசன வசதியுடன் துங்காவி ரோட்டில், 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையால் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு வருமானம் வரும் கோவிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எந்தவிதமான பராமரிப்பு பணிகளோ, பூஜைகளோ மேற்கொள்ளப்படுவதில்லை.
பத்ராகாளியம்மனின் சிலை பல துண்டுகளாக உடைந்து கோவிலின் அருகில் போடப்பட்டுள்ளது. இந் நிலையை பார்த்து அப்பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளை பராமரிப்பின்றி, பாதுகாக்காமல் விட்டுள்ளதால் நமது புராதன படைப்புகளை இழக்க நேரிடுகிறது. கோவில் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை கோவில், குறைந்தபட்சம் பராமரிப்பக்காவது பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். பழங்கால கோவில்களின் சிறப்புகளை அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ளும் வகையில், பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வருமானத்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் அரசு, சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.காத்திருக்கும் கோவில்கள் கோட்டமங்கலத்தில், வரதராஜ பெருமாள், வல்லக்கொண்டம்மன் ஆகிய பழங்கால கோவில்களுக்கு, 200 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உள்ளன. இந்த கோவில்களும், போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன. இக்கோவில்களுக்கு, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.