வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த பவித்ர உற்ஸவ விழா நேற்று உதய கருடசேவையுடன் நிறைவடைந்தது. இக்கோயிலில் நடைபெறும் பாரம்பரிய விழாக்களில் முக்கியமான இவ்விழா கடந்த இரு தினங்களுக்கு முன் காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவி க்கு திருமஞ்சன வழிபாடு, திவ்ய பிரபந்த பாராயணம் நடந்தது. இறுதி நாளான நேற்று சுவாமி வெண்பட்டு உடுத்தி கருட வாகனத்தில் எழுந்தருள, சிறப்பு பூஜைக்கு பின் வீதியுலா நடந்தது. மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து கோயிலினுள் அழைத்து சென்றனர். தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு பூஜை, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.