பதிவு செய்த நாள்
23
ஆக
2016
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா கும்பாபிஷேக திருப்பணியில், அம்மன் சன்னதி கோவில் தங்க கொடி மர பாலாலயம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 2002ம் ஆண்டு ஜூன், 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டதால், மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதற்காக, 25 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. கோபுரங்களை புதுப்பிக்க, முதல் கட்ட பாலாலயம், கடந்த, 2015 ஜனவரி, 26ம் தேதியும், கோவிலினுள் உள்ள சன்னதிகளை புதுப்பிக்க, கடந்த, 2015 மார்ச், 12ம் தேதி, இரண்டாம் கட்ட பாலாலயமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள, 54 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தை புதுப்பிப்பதற்கான பாலாலாயம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பின், அம்மன் சந்நதி தங்க கொடி மரம் முன், யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு பாலாலயம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.