பதிவு செய்த நாள்
23
ஆக
2016
11:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றி அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டது. தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது:இக்கோயில் பற்றி அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டியை, பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கலாம். வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது; பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி (கைடு) விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.
தரவிறக்கம் செய்வது எப்படி: அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் PINAKIN என்று தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும். மீனாட்சி கோயிலை பதிவிறக்கம் செய்து, இலவச ஒலி வடிவ தகவல் கேட்கலாம். இதன்படி இலவச ஒலி வடிவ தகவல் வழிகாட்டியை ஆப் லைனில் கேட்க முடியும். ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் பயன்படுத்துவோருக்கு PINAKIN அப்ளிகேஷன் கிடைக்கும். நான்கு கோபுரங்கள் முன், அறிவிப்பு பலகை எண்கள் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மேற்படி எண்களை தொடும் போது, அந்த பகுதியை பற்றிய விபரம் அலைபேசி வழியாக தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கிடைக்கும்.
PINAKIN எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம். அடுத்ததாக கன்னடம், மலையாளம், தெலுங்கு, பிரான்ஸ் மொழிகளில் கேட்கும் வசதி உருவாக்கப்பட உள்ளது என்றனர்.பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் விளக்கினார்.