கிருஷ்ணஜெயந்தியன்று தென்னிந்தியாவில் கண்ணனை வாசலில் இருந்து வரவேற்கும் விதமாக கோலமிடுவது வழக்கம். குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வரிசையாக அரிசிமாவினால் வரைவர். இதன் மூலம் கிருஷ்ணர் நேரில் இல்லத்துக்கு எழுந்து அருள்வதாக ஐதீகம். அவருக்கு பிடித்தமான அவல், வெண்ணெய்,சீடை, நாவல்பழங்களைப் படைத்து வழிபடுவர். கிருஷ்ணர் வருகையால் ஆயர்பாடியில் செல்வம் பெருகியது போல, ஆண்டுமுழுவதும் வீட்டில் செல்வவளம் இருக்க வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரின் பாதக்கோலத்தை இடுகின்றனர்.
ருக்மணி நேசித்த கண்ணன்: கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணரின் விக்கிரகம், ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சிறப்புபெற்றது. ஒருமுறை ருக்மணிக்கு, கிருஷ்ணர் பாலகனாக இருந்தபோது எப்படி இருந்தார் என்பதைக் காணும் ஆவல் ஏற்பட்டது. தனது ஆசையை தேவசிற்பியான விஸ்வகர்மாவிடம் கூறினாள். விஸ்வகர்மாவும் சாளக்ராம கல்லில், வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் பாலகிருஷ்ணன் விக்கிரகத்தை உருவாக்கினார். அதை ஆசையோடு வாங்கிய ருக்மணி, அதன் அழகில் மெய்மறந்து போனாள். அந்த விக்கிரகத்தை தன்னுடனேயே வைத்திருந்து பூஜித்து வந்தாள். ருக்மணிக்கு பின் அர்ஜுனன் அந்த விக்கிரகத்தை பூஜித்தான் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள மத்வ புஷ்கரணி அதிசயம் நிறைந்த தீர்த்தக்குளமாக திகழ்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கங்கை தீர்த்தம் இதில் கலப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் இருந்து தீர்த்தம் எடுத்துதான் கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த தீர்த்தத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, மத்வ தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே புண்ணியம் வந்து சேரும் என்பதுதான் அது!