பதிவு செய்த நாள்
25
ஆக
2016
02:08
எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு நேர்கின்றதோ, அப்போ தெல்லாம் நான் அவதரிப்பேன். தீயோர்களைத் தண்டித்து, நல்லோர்களைக் காப்பேன்” இது கீதைநாயகன் கண்ணன் வாக்கு. தெய்வம் மனித வடிவில் வரும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். அந்த வாக்கை மெய்ப்பிக்கும் சம்பவத்தைக் கேளுங்கள். எந்த நேரமும் கண்ணனின் நினைவு... அதன் விளைவாக ஆட்டம், பாட்டம், பஜனை என்று வாழ்ந்த உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு, கண்ணனே நேரில் அவருக்கு அவ்வப்போது காட்சியளித்து வந்தார். அக்ராஜி என்பவர் நாபாஜி என்ற ஆதரவற்ற சிறுவனுக்கு அடைக்கலம் தந்தார். அவர் அக்ராஜியின் மடத்தில் நடக்கும் பஜனையில் பங்கேற்பார். மகான்களின் உபதேசங் களைக் கேட்பார். அவரும் சிறந்த பக்தராக விளங்கினார். ஒருநாள்...அக்ராஜி பூஜை முடிந்து நிஷ்டையில் அமர்ந்தார். வழக்கமாக தரிசனம் தரும் கண்ணன், நீண்ட நேரமாகியும் வரவில்லை.அக்ராஜியின் மனதில் கவலை... “கண்ணா! என் பக்தியில் ஏதும் குறை வந்து விட்டதா? ஏதேனும் தவறு செய்து விட்டேனோ? எனக் கண் கலங்கினார்.
அருகில் இருந்த நாபாஜி நெருங்கி வந்து, “குருதேவா! உங்கள் பக்தியில் எந்தக் குறையும் இல்லை. ஒரு பெரும் வியாபாரியின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த வியாபாரி உங்கள் மீது பக்தி கொண்டவர். தன்னைக் காப்பாற்றினால், தன் பொருளில் கால் பங்கை, இந்த மடத்திற்கு அளிப்பதாக பகவானிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற கண்ணன் அங்கு போயிருக்கிறார். அதனால் தான் இன்று அவர் உங்களுக்குத் தரிசனம் தரவில்லை,” என்றார். சற்று நேரத்தில் பகவான் தரிசனம் தந்து விட்டு, நாபாஜி சொன்ன அதே விஷயத்தை தாமதத்திற்கான காரணமாகச் சொன்னார். அக்ராஜிக்கு வியப்பு மேலிட்டது. குருவான தன்னையும் மிஞ்சிய நாபாஜியை பாராட்டினார்.நாபாஜியோ, “உங்களுக்கு அடியேன் செய்த பணிவிடைகளாலும், தாங்கள் அளித்த ஆசியாலும் தான், கண்ணனின் அருள் எனக்கு கிடைத்தது,” என்று பணிவுடன் பதிலளித்தார். அக்ராஜியின் உத்தரவுப்படி நாபாஜி பாண்டு ரங்கனின் புகழ்பாடும் பக்த விஜயக் கதைகள் என்னும் நுாலை எழுதினார்.அந்த நுால் உருவாகக் காரணம்....துாய்மையான பக்தி, கருணை, குருபக்தி, குருசேவை ஆகியவையே. நாமும் நாபாஜி போல கண்ணனிடம் குறையில்லா வாழ்வை வேண்டிப் பிரார்த்திப்போம்.
எங்கும் நிறைந்த கிருஷ்ணர்: கிருஷ்ணருக்கு மனைவியர்கள் கணக்கில் அடங்காது என்பார்கள். எத்தனையோ ஆயிரம் மனைவிகள். பட்டமகிஷிகள் எட்டுப் பேர். நரகாசுர வதம் முடிந்தபின் அவனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் பெண்களும் கிருஷ்ணரை மணந்தனர். நாரதருக்கு இதில் பெரும் சந்தேகம் உண்டானது. கிருஷ்ணர் எப்படி இத்தனை பெண்களைச் சமாளிக்கிறார். அவருடைய மாயாசக்தி என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று துவாரகைக்கு கிளம்பினார். கிருஷ்ணரின் பத்தினிகளின் அழகிய மாளிகைகளைக் கண்டு பிரமித்தவராய், ருக்மிணி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு ருக்மிணி கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள். நாரதரைக் கண்டவுடன் ருக்மிணி,“வாருங்கள்! நாரதரே! உமது வரவு நல்வரவாகட்டும்!” என்று எழுந்து வரவேற்றாள். கிருஷ்ணர் நாரதரிடம்,“நாரதா! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். “பிரபோ! இதென்ன கேள்வி! தங்கள் திவ்யமான திருப்பாதங்களைச்சரணடைந்தவர்களுக்கு வேறென்ன வேண்டும்!” என்று வேண்டினார்.
“நாரதா! உன் மனம் போலவே ஆகட்டும்” என்று ஆசியளித்தார் கிருஷ்ணர். நாரதர் தன் ஐயத்தை கிருஷ்ணரிடம் கேட்காமல் மனதிலேயே வைத்துக் கொண்டு, மற்றொரு மாளிகைக்குப் புறப்பட்டார். அங்கு கிருஷ்ணர் உத்தவர் என்பவருடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார். நாரதரைக் கண்ட கிருஷ்ணர்,“நாரதா! நலம் தானே!” என்று குசலம் விசாரித்தார். “பிரபோ! உம் அருளால் பரம சவுக்கியம்,” என்று பதிலளித்து விட்டு கிளம்பினார். இன்னொரு வீட்டில் பகவான் கிருஷ்ணர், குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். வேறொரு வீட்டில் அவர் புராண பிரவசனம் கேட்டு ஆடிப்பாடிக் கொண்டிருந்தார். அடுத்த வீட்டில் ஹோமாக்னி செய்து கொண்டும், ஒரு வீட்டில் நீராடிக்கொண்டும், ஒரு வீட்டில் சமாராதனையாக அந்தணர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டும் இருப்பதைக் கண்ட நாரதர் ஆச்சரியப்பட்டார். இவ்வாறு வீடுகள்தோறும் கிருஷ்ணரைக் கண்ட நாரதர், “கிருஷ்ணா! உன் மாயா சக்தியை நேரில் அறிந்து கொண்டேன். எங்கும் கிருஷ்ணமயமாக இருப்பதைக் கண்டேன்,” என்றார்.
நடக்காததும் நடக்கும்: கிருஷ்ண பக்தரான அக்ரூரர் ஆயர்பாடியில் இருந்த கண்ணனையும், அவரது அண்ணன் பலராமரையும், கம்சன் ஆட்சி செய்த மதுரா நகருக்கு அழைத்து வந்தார். இவர்களைக் கண்ட மக்கள், அவர்களது அழகு கண்டு மெய் மறந்து நின்றனர். அப்போது அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தனப் பேழையுடன் சென்று கொண்டிருந்தாள். அவளிடம் கிருஷ்ணர், “குணத்தால் உயர்ந்த பெண்ணே! நறுமணம் மிக்க சந்தனத்தை யாருக்கு எடுத்துச் செல்கிறாய்?” என்றார். கம்ச ராஜாவுக்கு சந்தனம் அரைக்கும் பணிப்பெண் நான். ஒரு அசுரனுக்கு பணி செய்தே என் காலம் வீணாகி விட்டது. இன்றாவது இந்த சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து என் வாழ்வை பயனுள்ளதாக்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் சந்தனம் பூசினாள்.
கிருஷ்ணர் கை விரல்களால் அவளின் முக வாயையும், கால்களால் அவளின் பாதங்களையும் வேகமாக அழுத்தினார். கணப் பொழுதில் கூன் நிமிர்ந்த அவள் அழகிய இளம் பெண்ணாக மாறினாள். கிருஷ்ணருக்கு சேவை செய்த புண்ணியம் உடனடியாக பலன் கொடுத்ததை எண்ணி மகிழ்ந்தாள். இவள் யார் தெரியுமா? முந்தைய ராமாவதாரத்தில் கூனியாகப் பிறந்து, ராமனைக் காட்டுக்கு அனுப்பிய மந்தரை. இன்னொரு பிறவியில், கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து பாவம் நீங்கப் பெற்றாள்.நம்பிக்கையோடு கண்ணனை வணங்கினால், வளைந்த கூன் நிமிர்ந்தது போல நடக்காதும் நடந்து விடும். கிருஷ்ண ஜெயந்தியன்று மறக்காமல் கிருஷ்ணர் கோவிலுக்குப் போய் உங்கள் வேண்டுதலை வைத்து விடுங்கள். மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.
இதுவே பாதுகாப்பு கவசம்: உங்கள் ஊரில் நடக்கும் ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அப்போது உபன்யாசகர், *ஜானகி காந்தஸ்மரணே என்று ராகத்துடன் சொல்வார். சுற்றியிருப்பவர்கள் ஜெய் ஜெய்ராமா ராமா! என்பார்கள். இதையடுத்து ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்றோ, கோபிகா ஜீவன ஸ்மரணே என்றோ சொல்வார். அப்போது சொற்பொழிவு கேட்க வந்தவர்கள், கோவிந்தா! கோவிந்தா! என்பார்கள். இதற்கெல்லாம் காரணம் தெரியுமா? ஆன்மிகச் சொற்பொழிவுகளில் கலந்து கொள்பவர்கள், பேச்சு துவங்கும் முன் பலவிதமான உலக நினைவுகளில் மூழ்கியிருக்கலாம். மேலும், ஒருவருக்கொருவர் ஏதாவது வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இறைசிந்தனையை ஊட்டி, சொற்பொழிவின் பக்கம் கவனத்தைத் திருப்பவே, இவ்வாறு செய்யப் படுகிறது.
மேலும், இந்த கிருஷ்ண, ராம நாமங்கள் எத்தகைய இன்னல்களையும் தீர்க்க வல்லவை. திரவுபதி கோவிந்தா! என அலறிய போது, கண்ணன் அவளது மானத்தைக் காப்பாற்றினார். கஜேந்திரன் என்ற யானை கூகு என்ற முதலையிடம் சிக்கி ஆதிமூலமே என்று பெருமாளை அழைத்த போது, அவர் கருடன் மீது வேகமாக பறந்து வந்து காப்பாற்றினார். கடவுளின் மந்திரங்களை பக்தியுடன் உச்சரிக்கும் போது, அதன் சக்தி கவசம் போல நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.