கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார். வலக்கையில் தயிர் கடையும் மத்தும், இடக்கையில் வெண்ணெய் ஏந்தியுள்ளார். தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மிணி ஆசைப் பட்டாள். அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள். அந்த விக்ரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.இவர் மத்வாச்சாரியாரால் பூஜிக்கப் பெற்றவர். மத்வரின் கீர்த்தனைகள் இங்கு பாடப்படுகிறது.இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவுவாயில் விஜயதசமியன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னிதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.