பதிவு செய்த நாள்
27
ஆக
2016
11:08
நெல்லிக்குப்பம்: அறநிலையத்துறையின் அலட்சியத்தால், அகரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் சீரழிந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட, அகரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ராதா, ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.கருவறை விமானத்தில் மரச்செடி வளர்ந்தும், சுவர்களில் விரிசல்கள் உருவாகியும், கோவில் இடியும் நிலையில் உள்ளது. கிராமத்தினர் முயற்சியால், துளசி மற்றும் பூச்செடிகள், கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்டு, நித்யபூஜை ஒருவேளை மட்டும் நடை பெற்றுவருகிறது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் புரட்டாசி மாதத்தில், உறியடி விழா உள்ளிட்டவை சிறிய அளவில் நடத்தப்படுகிறது. இவ்வாறு, பழமை மணம் மாறாத இக்கோவிலை, அறநிலையத்துறையினர் பார்வையிட்டு, இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கை யகப்படுத்தி, கோவிலுக்கு வருமானம் வரும் வகையில், அவற்றை குத்தகைக்கு விட வேண்டும். இடியும் நிலையில் உள்ள பெருமாள் கோவிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதிவாசிகள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் கோரிக்கையாக உள்ளது.