பதிவு செய்த நாள்
27
ஆக
2016
12:08
ராஜமுந்திரி : ஆந்திராவைச் சேர்ந்த இனிப்பு கடைக்காரர் ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக சாதனைக்காக 12,500 கிலோ அடையிலான லட்டு தயாரித்து விநாயகருக்கு படைத்துள்ளார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன ராவ் என்ற அந்த நபர், இந்த பிரம்மாண்ட லட்டை தயாரிக்க 2400 கிலோ சுத்தமான நெய், 3350 கிலோ கடலை மாவு, 4950 கிலோ சர்க்கரை, 400 கிலோ முந்திரி, 200 கிலோ பாதாம், 125 கிலோ ஏலக்காய், 30 கிலோ பச்சை கற்பூரம் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு இவர் 6000 கிலோ எடையுள்ள லட்டினை தயாரித்து விநாயகருக்கு படைத்து, அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொடுத்தார். விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மெகா லட்டினை விநாயகருக்கு படைத்து, பக்தர்களுக்கு கொடுக்க உள்ளதாகவும், இந்த லட்டினை தயாரிக்க ரூ.30 லட்சம் செலவானதாகவும் மெகா லட்டு தயாரிக்க உதவியவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய லட்டினை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே தனது லட்சியம் என மல்லிகார்ஜூனா ராவ் தெரிவித்துள்ளார்.