பதிவு செய்த நாள்
31
ஆக
2016
11:08
சென்னை: செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, சென்னையில், நேற்று கோலாகலமாக துவங்கியது. விருது வழங்கி, மூத்த இசைக்கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். குரு வணக்கம் செய்யும் வகையில் நடத்தப்படும், இரண்டாம் ஆண்டு செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா, சென்னை, தி.நகரில் உள்ள, கிருஷ்ணகான சபாவில், நேற்று காலை துவங்கியது.
முதல் நிகழ்வாக, மாம்பலம் சிவா குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, ஷைலா ஆர்.கே., குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி, விஜய் ஜேசுதாசின் கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. மாலையில், மூத்த கலைஞர்களான பி.எஸ்.நாராயண சுவாமி - வாய்ப்பாட்டு; கமலாக்கர் ராவ் - மிருதங்கம்; கே.வி.கைலாசம் - நாதஸ்வரம்; பி.கிருஷ்ணா - தவில் கலைஞர்களுக்கு, திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாதபூஜை, மரியாதை செய்து, விருதுகளை வழங்கி கவுரவித்தார். நேற்று மாலை, பிரவின் காட்கிந்தியின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி; சங்கர நம்பூதிரி குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி; ராஜேஷ் குழுவினரின் மாண்ட லின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை, ரஞ்சித் குழுவினரின் கர்நாடக இசை, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, சாஸ்வதி பிரபுவின் கர்நாடக இசை, மைசூர் நாகராஜ், மஞ்சுநாதனின் வயலின், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.