பதிவு செய்த நாள்
31
ஆக
2016
11:08
பனாஜி: உலகில், முதல் முதலாக, திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட பெரு நகரம், குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்தது. இந்த நகரம், 3,450 ஆண்டுகளுக்கு முன், சுனாமியால் அழிந்திருக்கும் என, தொல்லியல் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடல்சார் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வு குறித்து, தேசிய கடல்சார் மையத்தின் இயக்குனர் நக்வி கூறியதாவது: ஹரப்பா காலத்தின் போது, தற்போதைய குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோலாவிரா பகுதியில், மிகப்பெரிய திட்டமிட்ட பெரு நகரம் அமைந்திருந்தது. ஹரப்பா மக்களின் துறைமுக நகரமாகவும் இந்தப் பகுதி இருந்துள்ளது. 3,450 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியால், இந்த நகரம் அழிந்திருக்கலாம். இதுவரை கண்டுபி டிக்கப்பட்ட உலகின் மிகவும் பழைய பெரு நகராக, தோலாவிரா உள்ளது.
இந்த நகரில், 14 முதல், 18 மீட்டர் அகலமுள்ள சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சுனாமியின் பாதிப்பில் இருந்து நகரை காப்பாற்ற, இந்தச் சுவர் கட்டப்பட்டு இருக்கலாம். ஒரு கோட்டை, நகரின் மையப் பகுதி, நகரின் வெளிப்பகுதி ஆகியவை இங்கு அமைந்திருந்தது, தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.