பதிவு செய்த நாள்
31
ஆக
2016
11:08
சென்னை: நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, காதி கிராமோத்யோக் பவனில், பொம்மை கொலு கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவன், முன்னாள் முதல்வர் காமராஜரால், 1957ல் துவக்கப்பட்டது. கிராமப்புற கைவினைஞர்கள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயல் படும் இந்த பவனில், 1967ம் ஆண்டு முதல், பொம்மை கொலு கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கண்காட்சியை, கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநில பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டின் புது வரவாக, கும்பகர்ணன், பாகுபலி விநாயகர், ஸ்ரீபதி பெருமாள், காய்கறி அம்மன், அகோபிலம், பத்ரிநாத், பிரமாண்ட தஞ்சை பொம்மை ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கண்காட்சி குறித்து காதி பவன் மேலாளர் செல்வராஜ் கூறியதாவது: பொம்மை கொலு ஆரம்பித்த முதல் ஆண்டில், 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வாடிக்கையாளர் வரவேற்பால், கடந்த ஆண்டு, 90 லட்சம் ரூபாயாக விற்பனை உயர்ந்தது. இந்தாண்டு, ஒரு கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்., 10ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில், 50 ரூபாய் முதல், 1.25 லட்சம் ரூபாய் வரையிலான விலையுள்ள பொம்மைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.