மதுரை மீனாட்சி கோயில் ஆவணி மூல விழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2016 11:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரருக்கு (செப்.,9) பட்டாபிஷேகம் நடந்தது. சுந்தரேஸ்வரரிடம் செங்கோல் சேர்ப்பிக்கப்பட்டு சொக்கர் ஆட்சி துவங்கியது. இக்கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த ஆக., 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகத்தை முன்னிட்டு (செப்.,9) வளையல் விற்ற லீலை நடந்தது. காலை 11:00 மணிக்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தங்கப்பல்லக்கு வாகனத்தில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிவ பூஜை முடிந்து மாலை 4:00 மணிக்கு புறப்பாடாகி கோயில் சேர்த்தியானது. பட்டாபிஷேகம்: சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். ராயர் கீரிடம், ரத்தினக்கற்கள் பதித்த செங்கோலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் இரவு 7:25 மணிக்கு நடந்தது. ஹாலாஸ் பட்டர், கற்பூரசுந்தர பட்டர் பூஜைகளை நடத்தினர். சகல தீபாராதனைகள் முடிந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரரிடம் சேர்ப்பித்தார். இதையடுத்து சொக்கர் ஆட்சி துவங்கியதாக ஐதீகம். (செப்.,10) நரியை பரியாக்கிய நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார், இணை கமிஷனர் நா.நடராஜன் செய்து வருகின்றனர்.