கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சியில் உள்ள புண்டரிகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் திருப்பதியின் ஏற்றம் கொண்ட சிறப்பு பெற்றதாகும். கோவிலில் புரட்டாசி நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். புரட்டாசி சனிக்கிழமைகள் தவிர்த்து 26 நாட்களுக்கு பெருமாள் நித்ய திருக்கல்யாண உற்சவம் நடத்துகின்றனர். நேற்று காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்தபின் திருக்கல்யாண வைபவத்தை துவக்கினர். விஸ்வக்சேனர் ஆராதனம், புண்ணியாகவஜனம், அங்குரார்பனம், பெருமாள் தாயார் மாலை மாற்றுதல் சம்பிரதாயங்கள் நிகழ்ந்தன. யாகம் பூர்த்தி செய்து மங்கல மேள தாளங்கள் முழங்க பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தேசிக பட்டர் குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.