பதிவு செய்த நாள்
24
செப்
2016
10:09
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும், தமிழகத்தில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2015 இறுதியில் கொட்டித் தீர்த்த கனமழை, பல மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அதேபோல, இந்த ஆண்டும், புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆற்காடு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், வாட்ஸ் ஆப்பில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாங்கம் சொல்வது என்ன?
அக்., 2016 முதல், 2017 ஜன., வரையிலான காலகட்டத்தில், கோவை, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உடுமலை மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளில், நில நடுக்கம் ஏற்படும். புரட்டாசி, கார்த்திகை மாதங்களில், பெரு மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்; தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி, கட்டடங்கள் சேதமாகும். அக்., 7ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, இலங்கை மற்றும் அந்தமான் மட்டுமின்றி, தமிழகத்தில், ராமேஸ்வரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அக்., 15ல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன், நில நடுக்கமும் ஏற்படும்; நவ., 3, முதல், சென்னையில் பலத்த மழை பெய்யும். நவ., 6ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; எப்போதும் இல்லாத அளவில், பலத்த புயல் வீசும். நவ., 13ல், முக்கிய அணைகள் நிரம்பி வழியும். நவ., 17ல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்படும். டிச., 4ல், வெள்ளத்தால், மதுரை பாதிக்கும்; டிச., 10 முதல், சென்னையில், ஒரு வாரம் மழை கொட்டும்; தாம்பரம் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - நமது நிருபர் -