பதிவு செய்த நாள்
24
செப்
2016
11:09
தர்மபுரி: காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்குள், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், பிரசித்தி பெற்ற அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலுக்கு கர்நாடகா பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில், நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கால பைரவர் கோவில் உள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று, பைரவரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அன்றைய தினம், கோவிலில் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டால் நன்மை நடக்கும். இந்த கோவிலுக்கு, அதிகளவில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெங்களூரு மற்றும் மைசூரு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபட்டு செல்வர். கோவில் வளாகத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட கார்கள் நிற்கும். இந்நிலையில், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலுக்கு, கர்நாடகா பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.