அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது கோவிலாங்குளம். அக்காலத்தில் கோயில்களும், குளங்களும் அதிமாக இருந்ததால் கோவிலாங்குளம் என மருவியது. இதற்கேற்ப இக்கிராமத்தை சுற்றி பத்ரகாளியம்மன், பெருமாள், பிள்ளையார், கருப்பசுவாமி, கரையோர கருப்பசுவாமி, வீரலட்சுமி, அம்பலப்ப சுவாமி உட்பட பல கோயில்கள் உள்ளன. இதில் அம்பலப்ப சுவாமி கோயில் 2 ம் நுாற்றாண்டில் சமணர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு ஒரு சமண பள்ளி துவங்கப்பட்டு தமிழ் பரப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வு கூறுகிறது. இது ஒரு மேடை போன்று உள்ளது. புத்தர் போன்று தவ கோலத்தில் 2 சிலைகளும் உள்ளன. சுற்றிலும் நான்கு துாண்கள் மட்டும் உள்ளன. மேடையில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த கோயில் எப்படி வந்தது, யார் தோற்றுவித்தனர் என்பது இப்பகுதி மக்களுக்கு இன்று வரை சரிவர தெரியவில்லை. ஆனால் நுாற்றாண்டு புகழ் வாய்ந்தது என்பதால் ஊர் மக்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். வரலாற்று ஆய்வாளர்களும் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். ‘இப்பகுதியில் கிடந்த தவக் கோல சிலைகளை அந்த காலம் முதல் எடுத்து வைத்து வழிபட்டு வருவதாக’ வயதான பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கும் இதன் வரலாறு தெரியவில்லை. எனினும் மக்கள் இது ஜைன சிலை, மகாவீர் சிலை என தாங்கள் கேள்விபட்டதை கூறுகின்றனர். இருந்தாலும் இதை அம்பலப்ப சுவாமி கோயில் என பெயர் வைத்து வழிபாடு செய்கின்றனர். புரட்டாசியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது.