பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்க பைரவர்களுக்கு (64 பைரவர்கள்) தனித்தனியாக, யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மூலவரை தரிசித்தனர்.திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில், எட்டு ஆண்டுகளாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்களுக்கு தனித்தனியாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்காக, பைரவர்கள் சிறப்பு மகா யாக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும் தனித்தனியாக யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, சாந்தி ஹோமம், திசா ஹோமம், அஸ்தர ஹோமம் மற்றும் மூலவர் அம்மனுக்கு நவகலச பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர த்ரிசதி ஹோமம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, நான்கு கால யாக பூஜைகள், வடுக பைரவர் பூஜை நடந்தன. 64 பைரவர்களுக்கும், 64 சிவச்சாரியார்கள் பூஜைகள் நடத்தினர். அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு, கேரள வாத்தியங்களுடன் பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சென்னை, திருவள்ளூர் வேலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.