புராணங்களில் திருப்பதிமலை வராக க்ஷேத்திரம் எனப்படுகிறது. சுவாமி புஷ்கரணி தீர்த்தக்கரையில் வராகர் கோவில் உள்ளது. கருவறையில் பூமிதேவியை மடியில் ஏந்திய நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரே திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருமலையில் இடம் கொடுத்தவர் என்று தலபுராணம் சொல்கிறது. இதனால் இவ்வூரை வராக க்ஷேத்திரம் என்பர். வராகருக்கு நைவேத்யம் படைத்து அறிவிப்பு மணி ஒலித்த பிறகே, வெங்கடாஜலபதிக்கு நைவேத்யம் படைக்கப்படும். ஆதிவராகர் கோவிலுக்குச் சென்ற பிறகே, ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. ஞானப்பிரான் என்னும் சிறப்பு பெயர் கொண்ட இவரை தரிசித்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.