காஞ்சிபுரம் திருவெஃகாவில் உள்ளது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில். இங்கு வலமிருந்து இடமாக பள்ளி கொண்ட கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இதனால் இவருக்கு, கிடந்தான்’ என்று பெயர். ஆழ்வார்கள் இவரை, கச்சிக்கிடந்தான்’, கஞ்சைக்கிடந்தான்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமழிசை ஆழ்வாரின் சீடரான கணிகண்ணன் என்ற பக்தரை, தன் மீது பாடல் பாடும்படி பணித்தான் ஒரு மன்னன். அவர் மறுக்கவே நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த திருமழிசையாழ்வார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். பள்ளி கொண்ட பெருமாளையும் தன்னுடன் அழைத்தார். ஆழ்வாரின் சொல் கேட்ட சுவாமியும் அவருடன் கிளம்பினார். இவ்வாறு தன் பக்தர் சொன்னதை உடனே செய்ததால் இவருக்கு, சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ என்ற திருநாமம் அமைந்தது. பொய்கையாழ்வாரின் அவதார தலம் இது என்பது கூடுதல் சிறப்பு.