மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் போட்டோக்கள் ஆயிரம் நினைவுகளா, மூடநம்பிக்கையா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2016 12:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டப அருங்காட்சியகத்தில் கண்ணாடி கூண்டுக்குள் உள்ள சிலைகளில் பக்தர்களின் போட்டோக்கள் மற்றும் ரூபாய்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால், நினைவலைகளை விட்டு சென்றனரா, இல்லை மூடநம்பிக்கையில் சிலைகள் முன் போட்டோக்களை விட்டு செல்கின்றனரா என சந்தேகம் எழுகிறது.
இக்கோயிலில் பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தாலும், ஆங்காங்கே பக்தர்களின் மூடநம்பிக்கையால் குப்பை தொட்டி போல் கோயிலை பயன்படுத்துவதால் வெளிநாட்டினரும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியகத்தில் விலை மதிப்புள்ள சிலைகள் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாக்கப்படுகின்றன.
இப்பெட்டியின் இடைவெளிக்குள் யாரோ ஒருவர் விட்டுச்சென்ற பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்து பக்தர்கள் தங்களது படங்களை கண்ணாடி கூண்டுக்குள் திணித்து விட்டு செல்கின்றனர். இதனால் கண்ணாடி கூண்டிற்குள் போட்டோக்கள் பரவிக்கிடக்கின்றன. தவிர ரூபாய் நோட்டுக்கள், லைசென்ஸ் நகல், ஐ.டி., கார்டு நகல் என குப்பை தொட்டி போல் மாற்றி வைத்துள்ளனர். இங்கு வந்ததன் அடையாளமாக விட்டுச் சென்றனரா மூடநம்பிக்கையா என்பது அந்த சொக்கநாதனுக்கே வெளிச்சம்.