பதிவு செய்த நாள்
27
செப்
2016
11:09
சென்னை: திருவாரூரில், கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிராமி எழுத்து மற்றும் வட்டெழுத்து கலந்த கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், கமலாலயம் செல்லும் வழியில், அனந்தீஸ்வரர் தியான மண்டபத்திற்கு, தெற்கு புறமுள்ள மதில்சுவரில், தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்து கலந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர், சோ.கண்ணதாசன், தஞ்சை, பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தில்லை கோவிந்தராஜனும் இதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, தில்லை கோவிந்தராஜன் கூறியதாவது: தமிழில், தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் சங்க காலத்திலேயே இருந்தன. பின், தமிழ் எழுத்து, பிராமி எழுத்தில் இருந்து வட்டெழுத்துக்கு உருமாறியது. பிராமியில் இருந்து, முழுமையாக வட்டெழுத்துக்கு மாற, எடுத்துக் கொண்ட காலகட்டத்தில், பிராமி எழுத்தும், வட்டெழுத்தும் கலந்தே எழுதப்பட்டன. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தை தான், தற்போது, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கண்டுபிடித்துள்ளோம். இவை, பிராமி, வட்டெழுத்துக்களுக்கு இடைப்பட்ட, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதில், எட்டு, ஏழு என்ற எண்ணிக்கையில், இரண்டு வரிகளில், 15 எழுத்துக்கள் உள்ளன.
அவற்றில், ற, எ, ஒ, ழ ஆகிய எழுத்துக்கள் மட்டும், படிக்கும் நிலையில் உள்ளன; மற்றவை, தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்தால் அடையாளம் காணலாம். தமிழகத்தில், ஈரோடு மாவட்டம் அரச்சலுார், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டம் மாங்குளத்தில் மட்டுமே, இந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
குறியீடா?: கல்வெட்டின் புகைப்படத்தை பார்த்து, முன்னாள் தமிழக தொல்லியல் துறை, கல்வெட்டு ஆய்வாளர், எஸ்.ராமச்சந்திரன் கூறுகையில், ற, த போன்ற எழுத்துக்கள் தெளிவாக தெரிகின்றன. மேலோட்டமாக பார்த்தால், இவை எழுத்தாகவோ, குறியீடாகவோ இருக்க, சம வாய்ப்புகள் உள்ளன; முழு ஆய்வுக்கு பிறகே, இறுதி முடிவு எடுக்க முடியும், என்றார்.